
சிகார் மாவட்டத்தின் நீம்கதானா பகுதியில் நடந்த ஒரு சாலை விபத்து, சுற்றுவட்டார மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. செங்கல் சூளை உரிமையாளர் சுபாஷ் ஜோஷி (62), சனிக்கிழமை மாலை சாலா கிராமத்தில் வீதியை கடக்க முயன்றபோது, புயல் வேகத்தில் வந்த மஹிந்திரா பொலேரோ கார் அவர் மீது மோதியது.
அவர் சுமார் 10 அடி உயரத்தில் காற்றில் பறந்து, தலைகீழாக விழுந்து, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்தக் கொடூர விபத்துக்கான வீடியோ, பொலேரோ காரின் டேஷ்கேமில் பதிவாகியுள்ளது. வீடியோவில், அந்த கார் அதிவேகமாக மூன்று வாகனங்களை முந்தி சென்று, சாலையின் ஓரத்தில் நடந்து சென்ற சுபாஷ் மீது நேராக மோதுவதை தெளிவாகக் காணலாம்.
ये एक्सीडेंट नहीं, मर्डर है
सीकर ,राजस्थान का विडिओ pic.twitter.com/LEBS6P6zpQ
— Nehra Ji (@nehraji77) June 3, 2025
மேலும், மோதிய பின் ஓட்டுநர் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றார். இதனால், பொதுமக்கள் இதை விபத்து அல்ல, திட்டமிட்ட கொலை எனக் கூறுகின்றனர். சுபாஷ் ஜோஷி, தனது வீட்டிலிருந்து 500 மீட்டர் தூரத்தில் உள்ள செங்கல் சூளைக்குச் சென்று, ஸ்டீல் கெட்டிலில் பாலை எடுத்து வீடு திரும்பிக் கொண்டிருந்த நேரத்தில்தான் இந்த விபத்து நடந்தது.
இந்த விபத்தில் பால் கெட்டி சுமார் 40 அடி தூரம் சென்று விழுந்தது. அந்த பகுதி கிராமப்புற சாலை என்பதால், மேலும் பாதிப்புகள் ஏற்படவில்லை என தெரிகிறது. விபத்துக்குப் பிறகு, அருகிலிருந்தவர்கள் அவரை உடனடியாக நீம்கதானா கபில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக அறிவித்தனர்.
இறந்தவரின் மகன் பங்கஜ் (35) சதார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். கவனக்குறைவாகவும் வாகனம் ஓட்டிய பொலேரோ ஓட்டுநருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டது.
சதார் போலீசார் தற்போது விபத்து வீடியோவின் அடிப்படையில் வழக்கை விசாரித்து வருகின்றனர். தலைமறைவாக உள்ள ஓட்டுநரை பிடிக்க விரிவான தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சம்பவம் தொடர்பாக விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது.