
ஆந்திர மாநிலம் மதனப்பள்ளி பகுதியை சேர்ந்தவர்கள் சலபதி(74), ஜெயசந்திரா(72) மற்றும் நாகேந்திரா(65). மூவரும் உடன் பிறந்த சகோதரர்கள். சலபதி மற்றும் ஜெயச்சந்திரா இருவரும் சப்- இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர்கள். நாகேந்திரா கல்லூரி விரிவுரையாளராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர்.
நேற்று முன்தினம் மூவரும் அனந்தபூரில் உள்ள அவர்களது உறவினர் வீட்டில் இறுதிச்சடங்கில் கலந்து கொள்வதற்காக வேணுகோபால் என்பவருடன் காரில் சென்றுள்ளனர். மூவரும் இறுதிச் சடங்கை முடித்துவிட்டு சொந்த ஊருக்கு திரும்பி கொண்டு இருந்தனர். அப்போது கார் ஸ்ரீ சத்ய சாய் மாவட்டம் பெத்தயலம்பள்ளி அருகே சென்றபோது வளைவில் நின்றிருந்த மினி லாரி மீது மோதியது.
இந்த விபத்தில் கார் முற்றிலும் நொறுங்கியதால் சலபதி,ஜெயசந்திரா, நாகேந்திரா மூவரும் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். வேணுகோபால் படுகாயங்களுடன் உயிர்த்தப்பினார். இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விபத்தில் படுகாயம் அடைந்தவரை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இறந்த மூவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.