
கோவா மாநிலம் பனாஜி பாம்போலிம் என்ற பகுதியில் அரசு மருத்துவக் கல்லூரி ஒன்று அமைந்துள்ளது. அங்கு சிகிச்சைக்காக செல்லும் நோயாளிகளுக்கு மருத்துவர்கள் சரியாக சிகிச்சை அளிக்கவில்லை எனவும், நோயாளிகளை மரியாதை குறைவாக நடத்துவதாகவும் புகார் எழுந்துள்ளது.
இதுகுறித்து சுகாதாரத்துறை மந்திரியிடம் செல்போன் மூலம் தொடர்பு கொண்ட நபர் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் மருத்துவமனைக்கு நேரில் சென்று மந்திரி ஆய்வு செய்துள்ளார். அப்போது அங்கு பணியில் இருந்த மருத்துவர் நோயாளிகளிடம் கடுமையாக நடந்து கொண்டதை பார்த்த மந்திரி அந்த மருத்துவரை திட்டியுள்ளார்.
அவரிடம் பேசிய மந்திரி நீங்கள் ஒரு மருத்துவர் உங்களுக்கு பொறுமை மிகவும் அவசியம். மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளிடம் பொறுமையாக பேச வேண்டும். நீங்கள் உங்கள் நாவை அடக்கி நோயாளிகளிடம் சரியாக நடந்து கொள்ள வேண்டும். மனசாட்சியுடன் செயல்படுங்கள் அகங்காரத்துடன் வேலை பார்க்க கூடாது. நான் பொதுவாக கோபப்படுவதில்லை.
ஆனால் நீங்கள் நோயாளிகளிடம் கடுமையாக நடந்து கொண்டதற்காக உங்களை உடனடியாக சஸ்பெண்ட் செய்கிறேன் என மந்திரி கூறியுள்ளார். இதனையடுத்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட மருத்துவருக்கு துறை ரீதியான நடவடிக்கையும் விசாரணையும் மேற்கொள்ளப்படும். மந்திரி மருத்துவமனைக்கு நேரில் சென்று ஆய்வு செய்தது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது.