ரியல் எஸ்டேட் தொழிலதிபர் வீட்டில் சூனியம் வைத்திருப்பதாக கூறி பரிகார பூஜை நடத்தி, 76 கிராம் தங்க நகைகளை மோசடி செய்த கோயில் பூசாரி கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மந்தைவெளியைச் சேர்ந்த தொழிலதிபர் எஸ்.பி.ஆர். ரமேஷ் (வயது 56), பெரிய அளவில் கட்டுமான மற்றும் ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். சமீபத்தில் தொழில் சரிவில் இருப்பதாக தனது நண்பரிடம் பகிர்ந்துள்ளார்.

இதையடுத்து, பெரம்பூர் பெரியார் நகர் பகுதியைச் சேர்ந்த பூசாரி பூர்ணபிரகாஷ் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 18-ம் தேதி ரமேஷ் வீட்டில் யாகம் செய்தபோது, ரமேஷின் தொழில் பார்ட்னர் வளர்ச்சிக்கு இடையூறாக சூனியம் வைத்துள்ளதாக கூறி, அதை அகற்ற பரிகார பூஜை வேண்டும் என வற்புறுத்தினார்.

இதை நம்பிய ரமேஷின் மனைவி 2 தங்க செயின், ஒரு வலையல் என மொத்தம் 76 கிராம் நகைகள் மற்றும் குடும்ப புகைப்படங்களை பூசாரியிடம் ஒப்படைத்தார். பூஜை முடிந்த பின்பும் நகைகளை திருப்பித் தராமல் பூசாரி பல மாதங்கள் தாமதித்த நிலையில், தொழிலதிபர் நேரடியாக நகைகளை கேட்ட போது, உங்கள் குடும்பத்தில் மீண்டும் சூனியம் வைக்க போகிறேன் என மிரட்டினார்.

இதனால், அபிராமபுரம் காவல் நிலையத்தில் ரமேஷ் புகார் அளிக்க, போலீசார் விசாரணை நடத்தி, உண்மை வெளிவந்ததை தொடர்ந்து பூர்ணபிரகாஷை கைது செய்து, 76 கிராம் நகைகளை மீட்டுள்ளனர். இந்த மோசடி சம்பவம் தொழிலதிபர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.