எல்லை தாண்டியதாக கூறி இலங்கை அரசால் கைது செய்யப்பட்ட 15 ராமேஸ்வர மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

ராமேஸ்வரம் மீனவர்கள் 500க்கும் மேற்பட்ட விசைப்படகுகளுடன் கடந்த எட்டாம் தேதி கடலுக்கு மீன் பிடிக்க சென்று விட்டு கரை திரும்பும் சமயத்தில் எல்லை தாண்டியதாக குற்றம் சுமத்தப்பட்டு இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். 15 மீனவர்கள் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் இன்று இலங்கை நீதிபதி “இலங்கை கடற்பகுதிக்குள் தமிழக மீனவர்கள் வேண்டுமென்றே நுழைகிறார்கள். அது மட்டும் இல்லாமல் எங்கள் நாட்டு அரசு தடை செய்த இழு வலையை பயன்படுத்தி அவர்கள் மீன் பிடிக்கின்றனர்.

தொடர்ந்து இதுபோன்று அவர்கள் நடந்து கொண்டாலும் மனிதாபிமான அடிப்படையில் அவர்களை இன்று விடுவிக்கிறோம்.  இவர்கள் மீண்டும் இதுபோன்று எல்லை தாண்டி கைது செய்யப்பட்டால் அதிகபட்சமாக மூன்று வருடங்கள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும்” என்ற நிபந்தனைகளுடன் 15 ராமேஸ்வர மீனவர்களை விடுதலை செய்துள்ளார். டெல்லியில் இலங்கை அதிபர் பிரதமர் மோடியை சந்தித்த சமயத்தில் இந்த மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடுத்தக்கது.