திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை சேர்ந்தவர் வேளாங்கண்ணி (30). இவர் பிரபல சாப்ட்வேர் நிறுவனத்தில் மென் பொறியாளராக வேலை பார்த்து வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு வேளாங்கண்ணியின் செல்போன் எண்ணுக்கு ஆன்லைனில் முதலீடு செய்வது தொடர்பான குறுந்தகவல் வந்தது.

அதிலிருந்த எண்ணை வேளாங்கண்ணி தொடர்பு கொண்டு பேசியுள்ளார். மறுமுனையில் பேசிய நபர் ஆன்லைன் வணிகத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும். வாட்ஸ் அப்பில் இதற்காக பயிற்சி அளிக்கிறோம் என்று ஆசை வார்த்தைகள் கூறியுள்ளார். அதன்படி வாட்ஸ் அப்பில் சில பயிற்சிகள் அளிக்கப்பட்டதாக தெரிகிறது.

பின்னர் அவர்கள் கூறியதை நம்பி வேளாங்கண்ணி 48 லட்சம் ரூபாய் பணத்தை முதலீடு செய்தார். ஆனால் அவருக்கு எந்த பணமும் திரும்ப வரவில்லை. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த வேளாங்கண்ணி திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.

அந்த புகாரின் பேரில் போலீசார் நடத்திய விசாரணையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த குமரேசன் உள்பட ஐந்து பேர் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனால் குமரேசனை போலீசார் கைது செய்தனர்.

பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்த குமரேசன் ட்ரான்ஸ்போர்ட் நிறுவனம் நடத்துவதாக கூறி பத்து வங்கி கணக்குகளை தொடங்கி மோசடி செய்தது தெரியவந்தது. இந்த வழக்கில் தலைமறைவாக இருக்கும் மற்ற 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.