சென்னை உயர்நீதிமன்றத்தில் சி.சொக்கலிங்கம் என்பவர் குருமன் சமுதாயத்தினருக்கு பழங்குடியினர் என சான்று வழங்குவது தொடர்பாக உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் அடிப்படையில் விதிகளை வகுக்க கோரி அளித்த மனுவை பரிசீலிக்க உத்தரவிட கோரி வழக்கு தொடர்ந்து உள்ளார். இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், கே.குமரேஷ் பாபு ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணையில் வந்தது. அப்போது நீதிபதிகள் பிறப்பித்துள்ள உத்தரவில், பட்டியலினத்தவர் அல்லது பழங்குடியினர் ஜாதி சான்றிதழ் வாங்குவது தொடர்பாக உச்ச நீதிமன்றம் ஏற்கனவே விதிகளை வகுத்துள்ளது.

அதன்படி மாநில அளவில் ஜாதி சான்றிதழ் சரிபார்ப்பு குழுக்கள் அமைக்க வேண்டும். மேலும் போலி  சான்றிதழ்கள் தொடர்பான புகார்கள் குறித்து விசாரிக்க கண்காணிப்பு பிரிவு ஏற்படுத்த வேண்டும். மேலும் போலிசான்றிதழ் கோரி விண்ணப்பிப்பது கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்கு தொடரவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதற்கான விதிகளை கடந்த 2016 -ஆம் ஆண்டில் சென்னை உயர் நீதிமன்றம் வகுத்துள்ளது. மானுடவியல் அறிக்கையை மட்டும் அடிப்படையாக வைத்து சான்றிதழ்களை வழங்கக் கூடாது எனவும் பெற்றோர் மற்றும் உடன் பிறந்தவர்களுக்கு ஏற்கனவே சான்றிதழ் வழங்கப்பட்டிருந்தால் அதன் அடிப்படையில் விண்ணப்பித்தவர்களுக்கு சான்றிதழ் வழங்க மறுக்க முடியாது எனவும் கூறப்பட்டுள்ளது.

மேலும் ஜாதி சான்றிதழ் கோரும் உண்மையான விண்ணப்பதாரர்கள் எந்தவித இடையூறும் இல்லாமல் சான்றிதழ் பெரும் விதமாகவும், போலி  சான்றிதழ்களை பெறுவதை தடுக்கும் விதமாகவும் உச்சநீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற தீர்ப்புகளின் அரசாணைகள் அடிப்படையில் 8 வாரங்களில் தமிழக அரசு விதிகளை வகுத்திட வேண்டும். இதனையடுத்து போலிசான்றிதழ்கள் பெறுவதை தடுப்பதற்கு உரிய சட்டம் இயற்ற வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தும் இதுவரை தமிழக அரசு சட்டம் இயற்றவில்லை. அதனால் ஜாதி சான்றிதழ் வழங்க கூடிய அதிகாரிகளுக்கு நீதிமன்றங்களின் தீர்ப்புகள் பற்றி விழிப்புணர்வு வகுப்புகளை நடத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.