துருக்கியில் உள்ள உசாக் பகுதியில் உள்ள பள்ளியில், ஆசிரியையொருவர் தனது நேர்த்தியான செயல் மூலம் ஒரு மாணவனின் உயிரைக் காப்பாற்றிய காட்சி சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது. அதாவது ஒரு சிறுவன் பிஸ்கட் சாப்பிடும் போது, அது மூச்சுக்குழாயில் சிக்கி மூச்சுத் திணறலுக்கு உள்ளானார். மாணவர் வேதனையுடன் தவித்த நிலையில், அவரது ஆசிரியை சில வினாடிகளில் ஹெய்ம்லிச் சூழ்ச்சி (Heimlich Maneuver) என்ற முதலுதவி முறையைப் பயன்படுத்தி மாணவனின் உயிரை காப்பாற்றினார். இந்த காணொளி  இணையத்தில் தற்போது வைரலாகி வருகின்றது.

இந்த சம்பவம் கடந்த வாரம் நடந்ததாகக் கூறப்படுகின்றது. வீடியோவில் அந்த சிறுவன் மூச்சுத்திணறல் காரணமாக அழுதுகொண்டிருப்பது தெளிவாக காணப்படுகிறது. உடனே மற்ற மாணவர்கள் சென்று ஆசிரியரை அழைத்து வந்த நிலையில் அவர் அதற்கான முறையான கைத்திறனுடன் செயல்பட்டு, சிறுவனை ஆபத்திலிருந்து மீட்டுள்ளார்.  அந்த ஆசிரியரை தற்போது பலரும் பாராட்டி வருகின்றனர்.

ஹெய்ம்லிச் சூழ்ச்சி என்பது மூச்சுத் திணறலுக்குள்ளாகும் நபர்களுக்கு வழங்கப்படும் முக்கியமான முதலுதவி முறை ஆகும். இதில், அந்த நபரின் வயிற்று பகுதியில் தொப்புளுக்கு மேலாக விரைவாகவும், மேல்நோக்கியும் அழுத்தம் கொடுக்கப்படுவதால், சிக்கிய உணவுகள் அல்லது பொருள்கள் வெளியே தள்ளப்பட்டு காற்றுப்பாதை சுத்தமாக்கப்படும்.

இந்த முறையை சரியான பயிற்சி மற்றும் அறிவுடன் செயற்படுத்தும் போது, அது பலருடைய உயிரைக் காப்பாற்றும் அளவிற்கு பயனுள்ளதாக அமைகிறது. மேலும் இது குறித்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வரும் நிலையில் பலரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.