
தென்காசி மாவட்டத்தில் உள்ள சிவராமலிங்கபுரம் நடுத்தெருவில் கட்டிட வேலை பார்க்கும் ராமர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சக்தி ஈஸ்வரி என்ற மனைவி உள்ளார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சக்தி ஈஸ்வரி இறந்துவிட்டார். இந்த தம்பதிக்கு சுப்பிரமணி(11), குமரேசன்(10) ஆகிய மகன்கள் இருக்கின்றனர். இவர்கள் தங்களது பாட்டி பண்டாரத்தி அம்மாள் பராமரிப்பில் இருந்தனர். இந்த நிலையில் உடல் நலக்குறைவால் அவதிப்பட்ட ராமரால் சரியாக வேலைக்கு செல்லவில்லை.
ராமரின் தாய்க்கும் உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் அவர் தனது மகள் வீட்டிற்கு சென்று விட்டார். எனவே ராமர் தனியாக பிள்ளைகளை கவனிக்க முடியாமல் அவதிப்பட்டு வந்தார். இதனால் மன உளைச்சலில் இருந்த ராமர் நேற்று முன்தினம் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் ராமரை காப்பாற்ற முயற்சி செய்தனர். அதற்குள் அவர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் அங்கு சென்று அவரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.