தெலுங்கானா மாநிலம் சங்கரெட்டி மாவட்டத்தின் மல்காபூர் கிராமத்தில் உள்ள வீட்டில் மூன்று பேரின் சடலங்கள் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர் சுபாஷ் தனது இரண்டு குழந்தைகள் ரித்விக் (13) மற்றும் ஆராத்யா (9) ஆகியோரை கொன்றுவிட்டு அவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் மூன்று நாட்களுக்கு முன்னதாகவே நடந்திருக்கக்கூடும் என போலீசார் சந்தேகிக்கின்றனர். வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதால் அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர்.

உடனே  சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது வீட்டிற்குள் சுபாஷ், ரித்விக், ஆராத்யா  ஆகியோர் உயிரிழந்த நிலையில் கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். மூவரது உடல்களும் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

குடும்பத் தகராறே இந்த பயங்கர முடிவுக்குக் காரணமாக இருக்கலாம் என ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.