இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் மற்றும் IPL போட்டிகளில் RCB அணிக்காக விளையாடிய யாஷ் தயாளுக்கு எதிராக, காசியாபாத்தைச் சேர்ந்த ஒரு பெண், “திருமணம் செய்வதாக கூறி, ஐந்தாண்டுகளாக தன்னை உடல் மற்றும் நிதி ரீதியாக சுரண்டியுள்ளார்” என கடும் புகார் அளித்துள்ளார். இந்தப் புகார் முதலில் ஜூன் 14-ஆம் தேதி பெண்கள் பாதுகாப்பு எண் 181-இல் கொடுக்கப்பட்டது. பின்னர், உத்தரப்பிரதேச மாநில முதல்வரின் IGRS ஆன்லைன் போர்ட்டல் மூலமாகவும் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளதால், இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புகாரின் அடிப்படையில், யாஷ் தயாள் தனக்கு திருமணம் செய்வதாக நம்பிக்கை அளித்து பலமுறை உறவு வைத்துள்ளதாக அந்தப் பெண் கூறியுள்ளார். இது தொடர்பான அரட்டைச் செய்திகள், ஸ்கிரீன்ஷாட்கள், வீடியோ அழைப்புகள் மற்றும் புகைப்படங்களை ஆதாரமாக அவரிடம் வைத்திருப்பதாகவும் கூறியுள்ளார். மேலும், யாஷ் தயாள் பல பெண்களுடன் இதேபோன்று உறவுகளில் ஈடுபட்டதாகவும், அவளிடம் பணம் வாங்கியதாகவும் அவர் புகாரில் தெரிவித்துள்ளார்.

இந்த புகாரை தொடர்ந்து, உத்தரப்பிரதேச முதல்வர் அலுவலகம், காசியாபாத்தின் இந்திராபுரம் வட்ட துணை கண்காணிப்பாளரிடம் (CO) அறிக்கையை கோரி, ஜூலை 21-க்குள் காவல்துறையினர் விசாரணையை முடிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர். இந்த விவகாரத்தில் யாஷ் தயாளின் தரப்பில் இதுவரை எந்த விளக்கமும் வழங்கப்படவில்லை.

இந்த புகார் தற்போது சமூக வலைதளங்களில் தீவிரமாக பரவி வருகிறது. பெண்கள் உரிமை அமைப்புகள் இது தொடர்பாக போலீசார் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி வருகின்றனர். புகார்தாரரின் மனநிலையும் சமூக வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் பிரபல கிரிக்கெட் வீரர் ஒருவர் மீது பெண் பாலியல் வன்கொடுமை புகார் கொடுத்துள்ளது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.