பிரேசிலின் தெற்கு மாநிலமான சாண்டா கேடரினாவில் சனிக்கிழமை காலை, சுற்றுலா பயணிகளுடன் புறப்பட்ட ஒரு வெப்பக் காற்று பலூன் வானத்தில் தீப்பற்றியபின் கீழே விழுந்து ஏற்பட்ட விபத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த பலூன், மொத்தம் 21 பேருடன் புறப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த துயரச் சம்பவம், பிரியா கிராண்டே என்ற பகுதியில் நடைபெற்றது. வானத்தில் பயணித்துக் கொண்டிருந்தபோது, பலூனில் திடீரென தீ பரவியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து பலூன் மேலிருந்து மெதுவாக தரையை நோக்கி விழுந்தது. இதை சுற்றுப்புற மக்கள் வீடியோவில் பதிவுசெய்துள்ளனர். சம்பவத்துக்குத் தகவல் கிடைத்ததும், மாநில இராணுவ தீயணைப்பு துறை மீட்பு குழுக்கள் விரைந்து வந்து 13 பயணிகளை உயிருடன் மீட்டு, அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பியுள்ளனர். விமானி உட்பட 8 பேர் உயிரிழந்தனர்.

“>

 

இந்த சம்பவம் குறித்து மாநில ஆளுநர் ஜோர்ஜினோ மெலோ தனது அனுதாபங்களைத் தெரிவித்தார். “இந்த விபத்து மக்களை  அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆழ்ந்த வருத்தம்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

இவ்விபத்து குறித்து பிரேசில் போலீசும், விமான பாதுகாப்புத் துறையும் சேர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வெப்பக் காற்று பலூன்கள் பயன்படுத்தும் நிறுவனங்கள், பாதுகாப்பு விதிகளை முற்றிலும் பின்பற்றுகிறதா என்பதையும் விசாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.