
பாமக கட்சியின் நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே வெளிப்படையாகவே மோதல் முற்றிவிட்டது. குறிப்பாக ராமதாஸ் அன்புமணி மீது பல்வேறு குற்றசாட்டுகளை முன் வைத்துள்ளார். அதாவது அன்புமணியை மத்திய அமைச்சராக்கி தான் தவறு செய்து விட்டதாகவும் வளர்த்த கடா மார்பில் முட்டுவது போல் தற்போது என் நெஞ்சில் ஏறி மிதிக்கிறார் எனவும் பெற்ற தாயையே அடிக்க முயன்றவர் எனவும் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார். அதோடு பாமக எனும் அழகான கண்ணாடியை அன்புமணி உடைத்து விட்டார் எனவும் ராமதாஸ் கூறியுள்ளார்.
இது பற்றி நேற்று நடந்த கூட்டத்தில் பேசிய அன்புமணி தேவையில்லாத பழி சொல்லுக்கு நான் ஆளாகிறேன் எனவும் இன்று முதல் எனக்கு விடுதலை கிடைத்து விட்டது எனவும் தெரிவித்தார். அதாவது நேற்று அன்புமணி தலைமையில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் எப்போதுமே நான் அடிமட்ட தொண்டனாகவே இருக்க விரும்புகின்றேன். பாமக என்பது யாருடைய தனி கட்சியும் கிடையாது. அது தொண்டர்களாகிய நீங்கள் உருவாக்கிய கட்சி. எனக்கு நேற்று தான் விடுதலை கிடைத்தது. இனி எந்த தடைகள் வந்தாலும் உடைத்தெறிந்து கண்டிப்பாக முன்னேறுவோம் என்று கூறினார்.
இந்நிலையில் தற்போது பாமக அலுவலகத்தின் முகவரியை அன்புமணி மாற்றியுள்ளார். அதாவது பாமக புதிய உறுப்பினர் சேர்க்கை படிவத்தை நேற்று அன்புமணி ராமதாஸ் வெளியிட்ட நிலையில் அதில் முகவரி மாற்றப்பட்டுள்ளது. அதன்படி சென்னை தி நகரில் உள்ள தன்னுடைய வீட்டு முகவரியை கட்சி அலுவலகம் முகவரியாக அவர் மாற்றியுள்ளார். மேலும் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே மோதல் ஏற்பட்டுள்ளது பாமக தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் கவுரவ தலைவர் ஜிகே மணி இது பற்றி என்ன சொல்வது என்றே தெரியவில்லை என வேதனை தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.