
கோயம்புத்தூர் மாவட்டம் குன்னத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ். இவர் அன்னூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பேருந்து ஓட்டுநராக பணியாற்றி வந்தார். இதே பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்த மாணவியை காதலித்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து பள்ளி நிர்வாகத்துக்குத் தகவல் கிடைத்ததும், சுரேஷை வேலையிலிருந்து நீக்கியுள்ளனர். ஆனால் சுரேஷும் மாணவியும் வெளியில் சந்தித்து, போனில் பேசி காதலை வளர்த்தனர்.
இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன் “திருமணம் செய்து கொள்வோம்” என ஆசைவார்த்தை கூறி மாணவியை சுரேஷ் சென்னைக்கு அழைத்துச் சென்றார். அங்கு தனது உறவினர் வீட்டில் இருவரும் தங்கியிருந்தனர்.
வீட்டுக்கு மகள் திரும்பாததால் மாணவியின் பெற்றோர் போலீசில் புகார் கொடுத்தனர். அந்நிலையில், சுரேஷின் நண்பர்கள் கொடுத்த தகவல் மற்றும் செல்போன் சிக்னல் அடிப்படையில் சுரேஷும் மாணவியும் சென்னையில் இருப்பது உறுதி செய்யப்பட்டது.
அன்னூர் காவல்துறையினர் சென்னைக்கு சென்று மாணவியை மீட்டு, சுரேஷை கைது செய்தனர். தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.
இதனை அடுத்து, சுரேஷ் மீது குழந்தைகள் பாதுகாப்பு சட்டமான போக்ஸோவின் கீழ் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், மாணவிக்கு மருத்துவ பரிசோதனை மற்றும் அரசு தரப்பில் சிகிச்சை மற்றும் கவுன்சிலிங் வழங்கப்பட்டு வருகின்றது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.