தெலுங்கானா மாநிலம் கமாரெட்டி மாவட்டத்தில் 10ம் வகுப்பு மாணவி மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராமரெட்டி மண்டலத்திலுள்ள சிங்கராயப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி ஸ்ரீநிதி. இந்த சிறுமி பள்ளிக்கு நடந்து சென்றுகொண்டிருக்கும்போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு  மயங்கி விழுந்துள்ளார். அருகில் இருந்த ஆசிரியர் உடனே உதவியளித்ததுடன், தனியார் மருத்துவமனைக்கு மாணவியை அழைத்து சென்றார். ஆனால், மருத்துவர்கள் ஏற்கனவே மாணவி இறந்துவிட்டதாக கூறிவிட்டனர்.

இது போன்ற சம்பவங்கள் ஏற்கனவே பல இடங்களில் நடந்துள்ளன. அதாவது உ.பி மாநிலம் அலிகார் மாவட்டத்தில் 6-ம் வகுப்பு மாணவன் மோகித் சௌத்ரி, தனது பள்ளியின் விளையாட்டு போட்டிக்கான பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது மாரடைப்பால் உயிரிழந்தார். அதேபோல், பெங்களூரு அருகே ஒரு 8 வயது மாணவி, தனது ஆசிரியருக்குப் புத்தகம் காண்பிக்கும் போது திடீரென மாரடைப்பால் உயிரிழந்தார். சிறுவர்கள் உடல்நல குறைபாடுகளால் இவ்வாறு பாதிக்கப்படுவது பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

மருத்துவ நிபுணர்களின் கூற்றுப்படி, கடந்த 20 ஆண்டுகளில் சிறுவர்களிடம் திடீர் மாரடைப்பு சம்பவங்கள் 22% அதிகரித்துள்ளன. “ஒரு ஆரோக்கியமான நபர் ஒரு மணிநேரத்திற்குள் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தால், அதனை திடீர் மாரடைப்பு எனக் கருதலாம். இது குழந்தைகளிடமும் அதிகரித்து வருவது கவலைக்குரியது. குழந்தைகளுக்கு சுவாச பிரச்னை அல்லது மார்பு வலி போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும்” என்று அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழக பேராசிரியர் ரப்பானி தெரிவித்துள்ளார்.