ஈரோடு மாவட்டத்திலுள்ள சிவகிரி பகுதியில் தனியாக வசித்து வந்த ராமசாமி (75), பாக்கியம் (65) தம்பதியை கொலை செய்துவிட்டு 12 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் ரமேஷ், மாதேஸ்வரன், ஆஞ்சியப்பன் மற்றும் நகைக்கடை உரிமையாளர் ஞானேஸ்வரன் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் நடத்திய விசாரணையில் தனியாக இருக்கும் தம்பதியை நோட்டமிட்டு அவர்களை கொலை செய்து கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்த நிலையில் பகலில் வேலைக்கு செல்வது மற்றும் இரவில் திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது.

இவர்கள் தமிழகத்தை உலுக்கிய பல்லடம் கொலை வழக்கையும் தாங்கள்தான் செய்ததாக ஒப்புக்கொண்டுள்ளனர். அதாவது அதாவது திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் தோட்டத்து வீட்டில் தனியாக வசித்து வந்த தெய்வசிகாமணி, அவரது மனைவி அலமேலு மற்றும் மகன் செந்தில்குமார் ஆகிய 3 பேரை அடித்துக் கொலை செய்துவிட்டு வீட்டில் இருந்த 8 சவரன் தங்க நகைகளை கடந்த வருடம் நவம்பர் மாதம் கொள்ளை அடித்து சென்றுள்ளனர். இதனை தற்போது மாவட்ட எஸ்பி செந்தில்குமார் உறுதிப்படுத்தி உள்ளார். இது குறித்த செய்தியாளர்கள் சந்திப்பில் எஸ்.பி செந்தில்குமார் கூறியதாவது,

இந்த வழக்கில் முதல் குற்றவாளி ஐயப்பன் குற்றத்தை ஒப்புக்கொண்டதன் பேரில் அடுத்த 2 பேரை விசாரித்தோம்.மரக்கட்டையை கொண்டு இவர்கள் தாக்கி கொலை செய்துள்ளனர், கையுறையை பயன்படுத்தி உள்ளனர்.

குற்றம் நடந்த இடத்தில் இருந்த கால் பாத தடங்களை இவர்களின் பாதங்களுடன் ஒப்பீடு செய்துள்ளோம்.கொள்ளையடித்த நகைகளை ஞானசேகரன் என்பவரிடம் கொடுத்து அதனை உருக்கி விற்பனை செய்ய முயன்றனர். உருக்கப்பட்ட 82 கிராம் நகையை ஆட்சியப்பன் வீட்டில் இருந்து பறிமுதல் செய்துள்ளோம்.

நகையை உருக்கி கொடுத்து ஞானசேகரன் என்பவரையும் கைது செய்துள்ளோம். பல்லடம் கொலை வழக்கிலும் இவர்களுக்கு தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கூடுதல் தகவல்களுக்காக கைதானவர்களை கஸ்டடியில் எடுத்து விசாரணை நடத்தப்படும் என்று கூறியுள்ளார்.