
ஹரியானா மாநிலம் ஹிசார் என்ற பகுதியை சேர்ந்தவர் தீக்ஷித்(15). இவர் அதே பகுதியில் உள்ள பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். அந்தப் பள்ளியில் படிக்கும் மற்றொரு மாணவனுக்கும் தீக்ஷித்திற்கும் இடையில் பல நாட்களாக தகராறு இருந்து வந்தது.
இந்த நிலையில் கண்டோன்மென்ட் என்ற பகுதியில் உள்ள ரயில் பாதை அருகே தீக்ஷித்திற்கும் அந்த மாணவனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அந்த மாணவனின் தாத்தா ராணுவ வீரர் என்பதால் அவரிடம் இருந்த துப்பாக்கியை மாணவர் கையில் எடுத்து வந்துள்ளார்.
இந்த நிலையில் தகராறு ஏற்பட்ட போது கோபமடைந்த அந்த மாணவன் தீக்ஷித்தை துப்பாக்கியால் சுட்டார். இதனால் தீக்ஷித் படுகாயமடைந்து கீழே விழுந்தார். அப்போது துப்பாக்கி சத்தம் கேட்டதால் அக்கம் பக்கத்தினர் சென்று பார்த்த போது தீக்ஷித் மயங்கி கீழே விழுந்து கிடந்தார்.
அதனை பார்த்து அதிர்ச்சியடைந்தவர்கள் உடனடியாக தீக்ஷித்தை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே தீக்ஷித் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் தீக்ஷித் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தீக்ஷித்தை துப்பாக்கியால் சுட்ட அந்த மாணவனை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.