
பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள ஒரு பகுதியில் தனியார் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையின் இயக்குனராக சுரபி ராஜ் என்ற 33 வயது டாக்டர் இருந்துள்ளார். இவர் நேற்று முன்தினம் மருத்துவமனையில் உள்ள தன்னுடைய அலுவலகத்தில் அமர்ந்திருந்தார். அப்போது ஒரு நோயாளியின் உறவினர்கள் போன்று சில கும்பல் அவருடைய அலுவலகத்திற்கு நுழைந்தது. அவர்கள் திடீரென துப்பாக்கியை எடுத்து டாக்டர் சுரபி ராஜை சரமாரியாக சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இந்த சம்பவத்தில் ரத்த வெள்ளத்தில் சரிந்து சுரபி ராஜ் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.
சத்தம் கேட்டு மருத்துவமனை ஊழியர்கள் அங்கு சென்று பார்த்தனர். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர்கள் உடனடியாக அவரை மீட்டு பாட்னாவில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில் மருத்துவமனை ஊழியர்கள் துப்பாக்கி சூடு நடந்த போது கூட பெரிய அளவில் சத்தம் எதுவும் கேட்கவில்லை என்று கூறியுள்ளனர். இந்த கொலையை சுரபி ராஜுக்கு தெரிந்தவர்கள் தான் செய்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். மேலும் மருத்துவமனைக்குள் புகுந்து டாக்டரை சுட்டு கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.