
மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள சந்தர்ப்பூர் மாவட்டத்தில் ஹரிராம் பால் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இதில் ஹரிராம் இன்று காலை குடும்பத்தோடு தன்னுடைய கிராமத்தில் உள்ள வீட்டில் இருந்தார். அப்போது திடீரென துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை ஏந்திய மர்மகும்பல் ஹரிராம் வீட்டிற்குள் வந்தனர்.
அவர்கள் ஹரிராமின் மனைவி மற்றும் குழந்தைகளை கடத்திச் செல்ல முயன்ற நிலையில் அவர்களை தடுக்க முயன்ற அந்த நபரை துப்பாக்கியால் சுட்டனர். இதில் ஹரிராம் பலத்த காயம் அடைந்த நிலையில் பின்னர் அந்த கும்பல் அவரது மனைவியையும், 2 பெண் குழந்தையையும் காரில் கடத்திவிட்டு அங்கிருந்து சென்று விட்டனர்.
இதில் படுகாயம் அடைந்த ஹரிராம் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்ட நிலையில் அவர்கள் வழக்கு பதிவு செய்து தற்போது கடத்தப்பட்ட அந்த பெண்ணையும் குழந்தைகளையும் தேடி வருகின்றனர்.
இந்த கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டது அதே கிராமத்தைச் சேர்ந்த சஞ்சய் சிங் என்பது தெரிய வந்த நிலையில் இதுவரை 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் கடத்தப்பட்ட பெண்ணும் குழந்தைகளும் எங்கிருக்கிறார்கள் என்ற விவரம் இதுவரை வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.