பெங்களூருவில் மளிகைப் பொருட்கள் வாங்கிக் கொண்டிருந்த இளம் பெண் ஒருவர், குடிபோதையில் இருந்த கும்பலால் தாக்கப்பட்டு, பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் அனேகல் தாலுகாவின் மைலசந்திரா அருகே உள்ள ரேணுகா யெல்லம்மா லேஅவுட் பகுதியில், நேற்று மாலை 4 மணியளவில் நிகழ்ந்தது. பெண், வெளியே சென்று மளிகை பொருட்கள் வாங்கிக் கொண்டிருந்தபோது, சாலையில் சண்டையிட்டுக் கொண்டிருந்த 4-5 பேர் கொண்ட குழுவினர் அவளை நெருங்கி ஆபாசமாக பேசி, கடத்தி செல்ல முயன்றதாக கூறப்படுகிறது.

இந்த திடீர் தாக்குதலில் தன்னை பாதுகாத்துக்கொள்ள அந்த இளம்பெண் போராடியதுடன், உள்ளூர் குடியிருப்பாளர்கள் அவளுக்கு உதவ முனைந்தனர். ஆனால் அந்தக் குழுவினர் அவர்களையும் தாக்கியதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. “அவர்கள் கஞ்சா புகைத்தபடி, என்னை கும்பலாக சேர்ந்து தாக்கினர். தற்காப்புக்காக அவர்களில் ஒருவரை நான் காலால் அடித்தேன்,” என்று அந்தப் பெண் தெரிவித்தார். இந்த சம்பவம் முழுவதும் சிசிடிவி கேமராக்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சம்பவம் நடந்த உடனே, அந்தப் பெண் பன்னேர்கட்டா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால் இதுவரை குற்றவாளிகளில் சிலர் கைது செய்யப்படவில்லை என்றும், தாக்கியவர் ஒருவருக்கு காயம் ஏற்பட்டதால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அந்த நபரிடமிருந்தும், பாதிக்கப்பட்ட பெண்ணிடமிருந்தும் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளதாக பெங்களூரு கிராமப்புற காவல் கண்காணிப்பாளர் சி.கே. பாபா உறுதிப்படுத்தியுள்ளார். மேலும், சிசிடிவி காட்சிகளில் தெரிந்துள்ள மற்ற குற்றவாளிகளும் விரைவில் கைது செய்யப்படுவார்கள் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் இந்த சம்பவம் பெங்களூருவில் பெண்கள் பாதுகாப்பு மீதான கவலையை மீண்டும் ஒருமுறை எழுப்பியுள்ளது.