தமிழக முதல்வர் ஸ்டாலின் மாநில அரசின் திட்டங்களுக்கு மத்திய அரசு ஸ்டிக்கர் ஒட்டுவதாக விமர்சித்திருந்தார். அதாவது படையப்பா படத்தில் வரும் மாப்பிள்ளை அவர்தான் ஆனால் அந்த சட்டை என்னுடையது என்ற வசனத்தை என்னை உள்துறை மந்திரி சொல்ல வைத்து விட்டார் என்று கூறி இருந்தார். இதற்கு தற்போது பாஜக கட்சியின் முன்னாள் தலைவர் அண்ணாமலை பதிலடி கொடுத்து ஒரு எக்ஸ் பதிவை போட்டுள்ளார். அதில்

இந்தியா முழுவதும், மொத்தம் 54 மத்திய அரசு உதவியில் செயல்படும் திட்டங்களும், 260 மத்திய அரசின் பல்வேறு துறைகளின் நேரடி திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் மட்டும் கடந்த நான்கு ஆண்டுகளில், வரிப்பகிர்வு, மானியங்கள், உதவித் தொகை, திட்டங்களுக்கான பங்கீடு, நெடுஞ்சாலைகள், விமான நிலையங்கள், துறைமுகங்கள், ரயில்வே உள்ளிட்ட மத்திய அரசுத் துறைத் திட்டங்கள் என ₹5,47,280 கோடி நிதி, மத்திய அரசு வழங்கியுள்ளது.

உண்மை இப்படி இருக்க, முரசொலியை திமுகவினரே படிப்பதில்லை என்பதற்காக, ஆங்கில முரசொலியில் தங்கள் வசதிக்கேற்ற கதைகளை எழுதச் சொல்லி, அதைக் கொண்டு வந்தால், மக்கள் நம்பி விடுவார்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர் திரு. ஸ்டாலின் அவர்கள் என்று பதிவிட்டுள்ளார்.

மேலும் கோவில் படத்தில் வரும் நடிகர் வடிவேலுவின் நகைச்சுவையை போல் மத்திய அரசின் திட்டங்களுக்கு எல்லாம் இது போன்ற நாச்சியப்பன் கடையில் திமுகவின் பெயரைப் பொறித்து மக்களை ஏமாற்றி வந்தது இனியும் நடக்காது என்று விமர்சித்துள்ளார்.