
ஐபிஎல் 2025 தொடரின் குவாலிஃபையர் 2 போட்டியில் மெதுவாக ஓவர்கள் வீசியதற்காக பஞ்சாப் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளின் கேப்டன்கள் ஸ்ரேயஸ் ஐயர் மற்றும் ஹர்திக் பாண்ட்யாவுக்கு அபராதம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
அதாவது மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்த்து ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்த முக்கியமான போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது. இருந்தாலும், இந்த போட்டியில் பஞ்சாப் அணி விதிகளை மீறி மெதுவாக ஓவர்களை வீசியதன் காரணமாக கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயருக்கு ரூ.24 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், பஞ்சாப் அணியின் மற்ற லெவன் வீரர்கள் (தாக்க வீரர்கள் உட்பட) அனைவருக்கும் ரூ.6 லட்சம் அல்லது அவர்கள் போட்டிக்கான கட்டணத்தில் 25% – எது குறைவாகவோ அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.
இதேபோல, மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா இதே குற்றத்தில் சிக்கி ரூ.30 லட்சம் அபராதம் செலுத்த வேண்டியதாயுள்ளது. அவருடன் விளையாடிய மற்ற வீரர்களுக்கும் ரூ.12 லட்சம் அல்லது 50% போட்டிக்கான கட்டணத்தில் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ஐபிஎல் நடத்தை விதிகளை மீறியதற்காக போட்டிக்குழுவினர் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் நாளை நடைபெறும் இறுதிப் போட்டியில் பஞ்சாப் மற்றும் பெங்களூர் அணிகள் மோத இருக்கும் நிலையில் இதுவரை இந்த இரண்டு அணிகளும் கோப்பையை ஒருமுறை கூட வெல்லாத நிலையில் யார் இந்த முறை கோப்பையை வெல்லப் போகிறார்கள் என்று எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.