உத்தரப் பிரதேசம் மாநிலம் பல்லியா மாவட்டத்தில் மனமுடைந்த பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாரா போகாரா பகுதியைச் சேர்ந்த மனோஜ் குப்தா என்பவர் மளிகைக் கடை நடத்தி வருகிறார். இவருக்கு நான்கு மகள்கள் உள்ளனர், இதில் இரண்டாவது மகளான அதிதி குப்தா (19) 11-ம் வகுப்பு படித்து வந்தார். குடும்ப உறுப்பினர்கள் தேர்வு காரணமாக வெளியே சென்ற நிலையில், இன்று காலை 10.30 மணியளவில் இந்த துயர சம்பவம் நடந்துள்ளது.

மனோஜ் குப்தா கடையில் இருந்து வீடு திரும்பியபோது, அதிதியின் அறை உள்ளிருந்து பூட்டப்பட்டிருந்தது. அவர் கதவை தட்டியபோது உள்ளிருந்து எந்த பதிலும் வராததால், உடைத்துக்கொண்டு உள்ளே சென்றார். அப்போது அவரது மகள் தூக்கிட்டு உயிரிழந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அவர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து, சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் அதிதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

போலீசார் மேற்கொண்ட ஆரம்பக்கட்ட விசாரணையில், அதிதி செல்போனில் ஒரு பையனுடன் பேசிக் கொண்டிருந்ததை அவரது தந்தை கண்டித்ததாக தெரிய வந்துள்ளது. இதனால் மனமுடைந்த அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்தனர். குடும்பத்தினரும் உறவினர்களும் இந்த சம்பவத்தால் பெரும் துயரத்தில் உள்ளனர்.