
திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த தனியார் நிதி நிறுவன அதிபரான குபேந்திரன்(58) என்பவர் கடந்த 18-ஆம் தேதி பழனி பைபாஸ் ராமையன்பட்டி அருகே கை, கால்கள் கட்டப்பட்டு அட்டைப்பெட்டியில் அடைக்கப்பட்ட நிலையில் ரத்த காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டார்.
இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது இரண்டு பெண்கள் உட்பட 3 பேர் டூவீலரில் வந்து அந்த அட்டைப் பெட்டியை வீசி சென்றது தெரியவந்தது.
அதன் பதிவு எண்ணை வைத்து விசாரித்து போலீசார் கண்ணன் என்பவரை கைது செய்தனர். அப்போது கண்ணன் கூறியதாவது, நாங்கள் எங்கள் வீட்டிலேயே இளம்பெண்ணை வைத்து பாலியல் தொழில் செய்தோம்.
குபேந்திரன் அடிக்கடி எங்கள் வீட்டிற்கு வந்து செல்வதால் அவருக்காகவே கோவை திருப்பூரில் இருந்து இளம்பெண்களை வரவழைத்தோம். கடந்த 18- ஆம் தேதி திருப்பூரில் இருந்து 26 வயது பெண்ணை வரவழைத்தோம்.
பேசிய தொகையை விட சற்று கூடுதலாக பணம் கேட்டதால் குபேந்திரன் வாக்குவாதம் செய்தார். இறுதியில் கைகலப்பாக மாறி நான், எனது மனைவி சாந்தி, 26 வயது பெண் என மூன்று பேரும் சேர்ந்து குபேந்திரனை கீழே தள்ளி அடித்து கொலை செய்தோம்.
பின்னர் யாருக்கும் தெரியாமல் கை கால்களை கட்டி அட்டை பெட்டியில் வைத்து சடலத்தை வீசினோம் என வாக்குமூலம் அளித்துள்ளார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.