
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள பிரயாக்ராஜ் பகுதியில் 12 வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறும் மகா கும்பமேளா கடந்த மாதம் 12ஆம் தேதி தொடங்கிய நிலையில் பிப்ரவரி 26 ஆம் தேதி வரை மொத்தம் 45 நாட்கள் நடைபெறும். மூன்று நதிகள் ஒன்று சேரும் திரிவேணி சங்கமத்தில் இதுவரை கோடிக்கணக்கானோர் புனித நீராடியுள்ளனர். இந்நிலையில் காஷ்மீரில் ஆளும் கட்சித் தலைவரான ஃபரூக் அப்துல்லாவிடம் மகா கும்ப மேளாவில் புனித நீராட வருவீர்களா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் நான் வீட்டில் தினந்தோறும் குளிக்கிறேன் என்று நகைச்சுவையாக பதில் வழங்கினார்.
அதன் பிறகு தொடர்ந்து பேசிய அவர் என்னுடைய வீடு மசூதியிலோ, கோவிலிலோ அல்லது குருத்வாராவிலோ இல்லை. என்னுடைய கடவுள் எனக்குள் தான் இருக்கிறார். டெல்லி சட்டசபை தேர்தலில் என்ன நடக்கும் என்று கூறுவதற்கு நான் முதலில் ஜோதிடராக தான் மாற வேண்டும். யார் வருவார்கள் யார் போவார்கள் என்பது எனக்கு எப்படி தெரியும் என்று கூறினார். மேலும் மகா கும்பமேளா பற்றி கூறும்போது அது மிகவும் நல்ல விஷயம். கடந்த 100 வருடங்களாக பக்தர்கள் புனித நீராட ஏற்பாடு செய்யப்படுகிறது. புனித நீராடும் அனைத்து பக்தர்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள் என்று கூறினார்.