
மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் கடந்த வருடம் மருத்துவக் கல்லூரி மாணவி ஒருவர் கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் குற்றவாளியான சஞ்சய் ராய் என்பவர் கைது செய்யப்பட்ட நிலையில் அவருக்கு ஆயுள் தண்டனை வழங்க நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
இந்நிலையில் தற்போது கொல்கத்தாவில் ஒரு சட்ட கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த மாணவியை 3 மாணவர்கள் சேர்ந்து கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த நிலையில் தற்போது அவர்கள் மூவரையுமே காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அதன்படி மனோஜ் மிஸ்ரா (30), பிரமித் முகர்ஜி (20), ஜைப் அகமது (19) ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதில் மனோஜித் மிஸ்ரா முன்னாள் மாணவராக இருக்கும் நிலையில் மற்ற இருவரும் தற்போது கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் ஆவார். பாதிக்கப்பட்ட மாணவிக்கு தற்போது கொல்கத்தாவில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை வழங்கப்படும் நிலையில் சம்பந்தப்பட்ட மாணவர்களின் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மாணவியை கல்லூரி வளாகத்தில் வைத்து மாணவர்கள் பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்திற்கு பாஜக கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளதோடு ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை விமர்சித்துள்ளது. மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.