உத்திரபிரதேச மாநிலம் ஹாத்ராஸ் மாவட்டத்தில் கடந்த ஜனவரி 22ஆம் தேதி நிகழ்ந்த கொடூர இரட்டை சிறுமி கொலை வழக்கில், சிறப்பு எஸ்சி/எஸ்டி நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு அளித்துள்ளது. இதில் தொடர்புடைய 2 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த கொலைகள் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டபோது, சிறுமிகளின் தந்தை சோட்டேலால் கௌதமின் தூரத்து மருமகன் விகாஸ் மற்றும் அவரது நண்பர் லல்லு பால் ஆகியோர் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டனர். இருவரும் ஜனவரி 21 இரவு 9 மணிக்கு வீட்டிற்கு வந்து, குடும்பத்துடன் இரவு உணவு உண்ணினர். பிறகு அதிகாலை 1.30 மணியளவில், அனைவரும் தூங்கியபோது வீட்டில் நுழைந்து, 6 மற்றும் 12 வயதுடைய சிறுமிகளை கழுத்தறுத்து கொலை செய்துள்ளனர்.

இந்த தாக்குதலில் சிறுமிகளின் பெற்றோர்கள் கத்திக்குத்து காயங்களுடன் உயிர்தப்பினர். உயிர் தப்பிய தாயின் சாட்சியுடன் மேலும் 28 பேர் சாட்சியமளித்தனர். இந்த வழக்கின் விசாரணையில் முக்கியமான தகவல் வெளியாகியது. அதாவது இவர்களின் சொத்துக்களை பெறுவதற்காக துபாயில் இருந்த மற்றொரு மருமகன் இவர்கள் இருவரையும் ஏவி இந்த கொலைகளை செய்தது தெரிய வந்தது. இந்த வழக்கில் விசாரணைகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் குற்றம் நிரூபிக்கப்பட்டது. இந்த வழக்கு நேற்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது நீதிபதி ராம் பிரசாத் சிங், இருவரும் தங்கள் இயல்பான குழந்தை பருவத்தையே தொடங்காத நிலையில் சிறுமிகளை கொன்று ஒரு கொடூரமான குற்றத்தை நிகழ்த்தியுள்ளனர்.

இது மனிதாபிமானம் அற்ற செயல். எனவே விகாஸ் மற்றும் லல்லு பால் இருவருக்கும் மரண தண்டனை வழங்குவதாக கூறினார். அதோடு தலா  ஐம்பதாயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மூன்றாவது நபர் வெளிநாட்டில் இருப்பதால் அவரது வழக்கு நிலுவையில் உள்ளது. மேலும் இந்த வழக்கு நடந்த 90 நாட்களுக்குள் விசாரணை நடத்தப்பட்டு தற்போது குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது பொதுமக்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தி வரவேற்பை பெற்றுள்ளது.