
கோலாலம்பூரில் இருந்து சிட்னி நோக்கி புறப்பட்ட ஏர்ஏசியா எக்ஸ் விமானத்தில் ஒரு பரபரப்பான சம்பவம் இடம் பெற்றது. ஜோர்தானை சேர்ந்த 45 வயதான ஷாடி தைசீர் அல்சாய்தே என்பவர், விமானத்தின் பின்புற அவசர வெளியேறும் கதவை திறக்க முயன்றதாக கூறப்படுகிறது.
உடனே விமான ஊழியர்கள் அவரை விமானத்தின் நடுப்பகுதிக்கு அழைத்துச் சென்றனர், ஆனால் அங்கு போயும் அவர் நடு கதவைத் திறக்க முயற்சி செய்துள்ளார். அவரது செயலால் விமானத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
விமானக் குழுவினரும் மற்ற பயணிகளும் இணைந்து அவரை கட்டுப்படுத்தினர். இந்த மோதலின் போது அவர் ஒரு விமான ஊழியரை தாக்கியதாகவும் கூறப்படுகிறது. பாதுகாப்பு காரணங்களால் விமான நிறுவனம் தரையிறங்கியவுடன் காவல்துறையிடம் உதவி கேட்டது.
இதனையடுத்து அல்சாய்தே மீது இரண்டு பாதுகாப்பு மீறல் மற்றும் ஒரு தாக்குதல் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக அவர் புதன்கிழமை சிட்னியின் டவுனிங் சென்டர் உள்ளூர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளார். அவுஸ்திரேலிய மத்திய காவல்துறையின் அதிகாரி டேவினா கோபல், “விமானத்தில் இந்த வகை ஆபத்தான செயல்கள் முற்றிலும் ஏற்க முடியாதவை.
பயணிகள் மற்றும் ஊழியர்கள் பாதுகாப்பாக பயணிக்கவேண்டும் என்பதே எங்கள் நோக்கம்” என்று தெரிவித்தார். குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் அல்சாய்தேக்கு ஒவ்வொரு குற்றத்திற்கும் 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.