குஜராத் சட்ட சபையில் கேள்வி நேரத்தின்போது பாலிவுட் பிரபலங்கள் பெயரில் போலி கொரோனா சான்றிதழ்கள் வெளியாகிய விவகாரம் குறித்து எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியது. அதாவது, நடிகைகள் ஜூஹி சாவ்லா, ஜெயா பச்சன் மற்றும் மகிமா சவுத்ரி போன்றோர் குஜராத்தில் இல்லாதபோது ஜுனாகட் மாவட்டத்தில் இருப்பது போல் அவர்களது பெயரில் போலியாக கொரோனா சான்றிதழ்கள் வெளியிடப்பட்டது குறித்து காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ. இம்ரான் கெடாவாலா கேள்வி எழுப்பினார்.

இது தொடர்பாக சுகாதார மந்திரி ருஷிகேஷ் பட்டேல் அவையில் கூறியதாவது, கொரோனா தொற்று காலத்தில் நடத்தப்பட்ட சிறப்பு தடுப்பூசி முகாமில் அடையாள அட்டைகளை காண்பிக்காமல் பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி நடத்தப்பட்டது. அப்போது அடையாள அட்டைகள் இல்லாத பிச்சைக்காரர்கள் (அ) புலம்பெயர்ந்தோர் சிறப்பு தடுப்பூசி முகாமுக்கு அழைத்துவரப்பட்டனர்.

இந்நிலையில் இந்த பெயர்களை கொண்ட நபர்கள் வந்த போது, முகாமிலிருந்த அதிகாரி அவசர கதியில் பெயர்களை எழுதி இருக்கிறார் என தெரிவித்து உள்ளார். இதுகுறித்து முறையான விசாரணை நடத்த சிறப்பு குழு அமைக்கப்பட்டு இருக்கிறது என கூறியுள்ளார். அதன்படி ஆலோசகர்கள் அடங்கிய குழு தொடக்ககட்டு ஆய்வு நடத்தியுள்ளனர். மேலும் தொடர் விசாரணையும் நடத்தி வருகின்றனர் என கூறியுள்ளார்.