சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகேயுள்ள குன்றக்குடி மயிலாடும் பாறை பகுதியைச் சேர்ந்த சுலோச்சனா  (70) என்ற மூதாட்டி தன்னுடைய பேரனுடன் சேர்ந்து வாழ்ந்து வந்தார். இவருக்கு முனீஸ்வரி மற்றும் பாண்டி செல்வி என்ற இரண்டு மகள்கள் உள்ளனர்.

சிறுநீரக பாதிப்பால் பாதிக்கப்பட்டிருந்த இவர், புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், கடந்த இரவு பேரன் லோகேஷ் அவரை வீட்டிற்கு  அழைத்துச் சென்றார்.

அன்றிரவு, மூதாட்டி சுலோச்சனா தூங்கிய போது தூக்கத்திலேயே அவரது உயிர் பிரிந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து மூதாட்டி வளர்த்து வந்த நாய் திடீரென அவரை கடித்து குதறியது. இதனால் மூதாட்டியின் முகம் மற்றும் கை கால்களில் பலத்த காயங்கள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

அதே நேரத்தில், அருகில் இருந்த வளர்ப்பு பூனையும் மூதாட்டியை கடித்ததாகக் கூறப்படுகிறது.  இதனால் கோபமடைந்த வளர்ப்பு நாய் அந்த பூனையையும் கடித்து கொன்றது. பேரன் லோகேஷ் இதைக் கண்டு உடனடியாக குன்றக்குடி போலீசாருக்கு தகவல் அளித்தார்.

போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.