இங்கிலாந்தில் கெல்லி கிநைப்ஸ்(42) என்ற பெண் வசித்து வருகிறார். இவர் தூக்கத்தில் தன்னை அறியாமலேயே தேவையில்லாத பொருட்களை ஆன்லைனில் ஷாப்பிங் செய்கிறார். இதனால் கெல்லி கிநைப்ஸ்க்கு மூன்று லட்ச ரூபாய் வரை கடன் ஏற்பட்டுள்ளது. இதனால் வருத்தப்பட்ட கெல்லி மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்து பார்த்தார். அப்போது அவருக்கு பாராசோம்னியா என்ற அரியவகை நோய் இருப்பது தெரியவந்தது.

இந்த நோய் இருப்பவர்கள் தூக்கத்தில் சுயநினைவு இல்லாமலே பேசுவது, நடப்பது, சாப்பிடுவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுவார்கள். தூக்கத்தின் போது மூளையின் ஒரு பகுதி மட்டும் செயல்படுவதால் இது நடக்கிறது. ஒரு படி மேலே போய் கெல்லி ஷாப்பிங் செய்துள்ளார். இவர் ஆன்லைனில் பெயிண்ட் வாளிகள், பிளாஸ்டிக் நெட், புத்தகங்கள், விளையாட்டு பொருட்கள் பிரிட்ஜ், மிட்டாய், மேசை என தேவை இல்லாத பொருட்களை வாங்கியுள்ளார்.

ஆன்லைனில் ஏற்கனவே கெல்லியின் வங்கி கணக்கு விவரங்கள் மற்றும் கிரெடிட் கார்டு தகவல்கள் பதிவாகி இருக்கிறது. இதனால் தானாகவே ஷாப்பிங் செய்யும் போது பணம் சென்று விடுகிறது. தனிப்பட்ட வங்கி விவரங்களை தூக்கத்தில் யாருக்காவது அவர் ஷேர் செய்து விடுகிறார். இதனால் மோசடி ஏற்படும் அபாயமும் இருப்பதாக கெல்லி வேதனையுடன் கூறியுள்ளார். கடந்த 2018-ஆம் ஆண்டும் தனக்கு முதல் குழந்தை பிறந்த போது கெல்லிக்கு இந்த வியாதி வந்தது. இப்போது கெல்லி மூன்று குழந்தைகளுக்கு தாயாக இருக்கிறார். மருத்துவ சிகிச்சை பெற்று அது பெரிதாக பலம் அளிக்கவில்லை என அவர் கூறுகிறார்.