
மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் நடந்த ராஜா ரகுவன்ஷி கொலை வழக்கு நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இக்கொலைக்குப் பின்னால் ராஜாவின் மனைவி சோனம் ரகுவன்ஷியோடு சேர்ந்து, அவரது காதலன் ராஜ் குஷ்வாஹா மற்றும் மூன்று நண்பர்கள் சதி திட்டம் தீட்டியிருந்தது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
முதலில் ப்ளான் A – தோல்வியடைந்தால் ப்ளான் B
ராஜாவை கொல்லும்படி, சோனம் தனது காதலனுடன் சேர்ந்து மூன்று நண்பர்களிடம் ஒப்பந்தம் செய்திருந்தார். ஷில்லாங்கில் திட்டமிட்டபடி அவரை கொல்ல அவர்கள் முயன்றனர். ஆனால் அந்த முயற்சி தோல்வியடைந்தால், பிளான் B தயாராக இருந்தது. ராஜாவை ஒரு உயரமான இடத்தில் செல்ஃபி எடுக்க வைத்துச், தள்ளி விபத்தாக காட்டும் திட்டம் இது. இதனால் மரணம் விபத்து என பதிவு செய்யப்படும் என சோனம் நினைத்திருந்தார்.
கேஸ் விசாரணையின் போது, ஹவாலா வழியாக பணம் கொடுக்கப்பட்டிருப்பது உறுதியானது. பிதாம்பூரில் உள்ள ஹவாலா வியாபாரியிடம் இருந்து ரூ.50,000 எடுத்த காதலன் ராஜ், அந்த மூன்று நண்பர்களிடம் கொடுத்துள்ளார். இந்த பணம் கொலை திட்டத்துக்காக பயன்படுத்தப்பட்டிருக்கலாம். சோனத்தின் வங்கி கணக்கிலும் அந்த பரிவர்த்தனைத் தடயங்கள் உள்ளன.
மே 11 அன்று ராஜா மற்றும் சோனம் திருமணம் செய்துகொண்டனர். திருமண நாளிலேயே, ராஜ் – சோனத்திடம் “ராஜாவை ஷில்லாங்குக்குக் கூட்டிவா, நாங்கள் அவனை அங்கே கொல்வோம்” என்று கூறியுள்ளார். சோனம், “நீங்கள் காமாக்யாவை தரிசிக்காம என்னை தொடமுடியாது” என்று கூறி ராஜாவை ஷில்லாங்குக்குக் கூட்டிச் சென்றார். அங்கேதான் கொலை நடந்தது.
ராஜாவை கொன்ற பிறகு, சோனம் நேபாளம் வரை தப்பிச் செல்ல திட்டமிட்டிருந்தார். ஆனால் போலீசார் “ஆபரேஷன் ஹனிமூன்” எனும் விசாரணை நடவடிக்கையில், 120 பேர் கொண்ட குழுவுடன் 42-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, சோனத்தை காஜிப்பூரில் பிடித்தனர்.
இந்த முழு வழக்கின் பின்னணியில் சோனமே முக்கிய மூளை என தெரியவந்துள்ளது. தனது கணவனைக் கொன்றதற்காக திட்டம் வகுத்து, பணம் செலுத்தி, நண்பர்களை பயன்படுத்தி, எல்லாம் திட்டமிட்ட வகையில் செய்திருக்கிறார். மேலும் இந்த கொலைக்காக முதலில் 4 லட்சம் வரை சோனம் பேரம் பேசிய நிலையில் பின்னர் 20 லட்ச ரூபாய் வரை கொடுக்க முன்வந்துள்ளார். இதில் முதற்கட்டமாக அவர்களுக்கு 15 ஆயிரம் ரூபாய் வரை கொடுத்துள்ள நிலையில் அவரது காதலன் ஐம்பதாயிரம் ஹவாலா பணத்தை கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனைகள் வழங்க வேண்டும் என கோரிக்கைகள் வலுத்து வருகிறது.