
சென்னை மாவட்டம் கொடுங்கையூர் டீச்சர்ஸ் காலனி தேர்ந்தவர் மோகனா. இவரது மகன்களான லோகேஷ், சதீஷ் ஆகிய இருவரும் மலேசியாவில் வேலை பார்த்து வருகின்றனர். தற்போது மோகனா லோகேஷுக்கு திருமணம் செய்ய பெண் தேடி வந்தார்.
கடந்த மாதம் 25-ஆம் தேதி மோகனாவை செல்போன் மூலம் தொடர்பு கொண்ட ஒரு பெண் நான் திருமண தரகர். உங்கள் மகனுக்கு வரன் தேடுவதை அறிந்தேன். என்னிடம் நிறைய பெண்களின் ஜாதகமும் புகைப்படமும் உள்ளது. அதில் உங்களுக்கு பிடித்த பெண்ணை நீங்கள் தேர்வு செய்து கொள்ளுங்கள் என கூறியதால் மோகனா அந்த பெண்ணை வீட்டிற்கு வருமாறு கூறியுள்ளார்.
அதன்படி 60 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் வீட்டிற்கு வந்து மோகனாவிடம் உங்கள் வீட்டில் செய்வினை உள்ளது. அதை சரி செய்தால் தான் மகனுக்கு திருமணம் நடக்கும். வேப்பிலை மஞ்சள் கலந்த தண்ணீரை கொண்டு வாருங்கள் என கூறியுள்ளார்.
இதனை நம்பிய மோகனா அந்த பெண் கூறியதை செய்தார். அந்த பெண் பூஜை செய்வது போல நடித்து மயக்கம் மருந்தை தண்ணீரில் கலந்து மோகனாவை குடிக்க வைத்தார். அதனை குடித்து மோகனா மயங்கிய பிறகு அவர் அணிந்திருந்த மூன்று பவுன் தங்க நகை பத்தாயிரம் ரூபாய் மதிப்புள்ள செல்போன் ஆகியவற்றை திருடிவிட்டு அந்த பெண் தப்பி சென்றார்.
மயக்கம் தெளிந்து கண்விழித்த மோகனா நடந்த சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் சிசிடிவி கேமரா காட்சியின் அடிப்படையில் செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த பத்மாவதி(56) என்பவரை கைது செய்தனர். அவர் ஏற்கனவே இரண்டு திருட்டு வழக்குகளில் கைதாகி சிறை சென்று வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.