
உத்தரப்பிரதேச மாநிலம் எட்டாவா மாவட்டத்தில் திருமணமான இரண்டு மாதங்களுக்குப் பிறகு, ஒரு கணவர் தன் மனைவியை காரில் வைத்து மயக்கமருந்து கொடுத்து, கால்வாய் அருகே வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட மனைவி எஸ்பி அலுவலகத்தில் நேரில் சென்று புகார் அளித்துள்ளார்.
ஆக்ரா மாவட்டத்தில் உள்ள ஜெய்த்பூர் கலன் சதுர்புஜ்புராவைச் சேர்ந்த ஷியாம் வதி என்ற பெண், கடந்த ஏப்ரல் 30ஆம் தேதி சிவில் லைன்ஸ் அட்டா ஜுஹானா பகுதியைச் சேர்ந்த கிதாப் சிங்கை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பிறகு சில நாட்களிலிருந்தே அவர் மற்றும் அவரது குடும்பத்தினர், அதிக வரதட்சணை கேட்டு தனக்கு மனவேதனை அளித்து வந்ததாக கூறியுள்ளார். மேலும், அவர் கூறுகையில், ஒரு அறையில் தன்னை பூட்டி வைத்து, வாயில் துணி திணித்து தாக்கியதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.
வியாழக்கிழமை மாலை, கணவர், “உன்னை உன் பெற்றோர் வீட்டுக்கு அழைத்து செல்கிறேன்” என கூறி, நண்பரின் காரில் அழைத்துச் சென்றுள்ளார். செல்லும் வழியில் ஏதோ போதை பொருள் கலந்த மயக்க மருந்தை அந்த பெண்ணுக்கு கொடுத்துள்ளார். அந்தப் பெண்ணுக்கு சுயநினைவு திரும்பிய போது, தன்னை எட்டாவா அருகே உள்ள இக்தில் கால்வாய் பகுதியில் கிடந்தது தெரியவந்தது என்று கூறியுள்ளார்.
இதைத்தொடர்ந்து, அந்த வழியாகச் சென்ற ஒரு இளைஞரிடம் மொபைல் கேட்டுக்கொண்டு காவல்துறைக்கு தகவல் அளித்துள்ளார். போலீசார் விரைந்து வந்து அந்த பெண்ணை பாதுகாப்பாக காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். பின்னர், அவரது குடும்பத்தினர் வருகைதந்து அவரை வீட்டிற்கு அழைத்துச் சென்றனர். இதனையடுத்து, வெள்ளிக்கிழமை அன்று, பாதிக்கப்பட்ட பெண் தனது குடும்பத்தினருடன் எஸ்பி அலுவலகத்தில் நேரில் சென்று புகார் அளித்துள்ளார்.
இந்த புகாரை தொடர்ந்து போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். மேலும் பெண்ணின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், அவரது கணவரிடம் விரைவில் விசாரணை நடத்தப்படும் என்றும், சம்பவத்தில் ஈடுபட்டவர்கள்மீது உரிய சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.