உத்தரப்பிரதேசத்தின் குஷிநகர் மாவட்டத்தில், திருமணமான பெண்ணை சந்திக்க வந்த அவரது முன்னாள் காதலனை அவரது மாமியார் மற்றும் குடும்பத்தினர் பிடித்து, முகத்தில் கரியை பூசி ஊர்வலமாக அழைத்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

நவுரங்கியா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கிராமத்தில் திருமணமான பெண் வசித்து வருகிறார். இவர் திருமணத்திற்கு முன்பே தனது கிராமத்தைச் சேர்ந்த ஒரு வாலிபரை காதலித்து வந்ததாக தெரிகிறது. நேற்று இரவு அந்த பெண்ணின் காதலன் தனது நண்பர்களுடன் இளம்பெண்ணை பார்க்க மாமியார் வீட்டிற்கு வந்துள்ளார்.

இதனை அறிந்த குடும்பத்தினர் அந்த வாலிபரை பிடித்து நாற்காலியில் கட்டி வைத்தனர். அதன் பிறகு அவரது முகத்தில் கறியை பூசி அவமானப்படுத்தும் விதமாக வீடியோ எடுத்து அவரை ஊர்வலமாக அழைத்துச் சென்றனர். அந்த வீடியோ சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், இது குடும்பத்தினருக்குள் உள்ள பிரச்சனை என தெரிவித்துள்ளனர். இதுவரை எவரும் போலீசில் புகார் அளிக்கவில்லை என்றும், புகார் வந்தவுடன் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எஸ்.எச்.ஓ. தீபக் குமார் சிங் கூறியுள்ளார்.