மகாராஷ்டிராவின் சாங்லி மாவட்டம் குப்வாட் தாலுகாவில்  திருமணமாகி வெறும் 15 நாட்களுக்குள், மனைவி கணவரை கொலை செய்ததாக கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் புதன்கிழமை அதிகாலை 12.30 மணியளவில் நிகழ்ந்தது. அதாவது  மனைவியிடம் பிரிந்து வாழ விரும்புகிறேன் என்று கூறிய கணவர் அனில் லோகண்டேவை (50) அவரது மனைவி ராதிகா (27) கொன்றதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

அனில் லோகண்டேவின் முதல் மனைவி புற்றுநோயால் இறந்ததைத் தொடர்ந்து, இது அவரது இரண்டாவது திருமணம் என போலீசார் கூறினர். திருமணத்தை முடிக்க வேண்டும் என்ற கணவனின் முடிவால் மனைவி ராதிகா கடும் கோபமடைந்து, படுக்கையில் தூங்கிக் கொண்டிருந்த கணவரை கோடரியால் தாக்கியுள்ளார். இந்த தாக்குதலில் கணவர் உயிரிழந்துள்ளதார்.

சம்பவம் தொடர்பாக குப்வாட் எம்ஐடிசி போலீசார் ராதிகாவை கைது செய்து பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தற்போது இந்தக் கொலை சம்பவம் குறித்து மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம், இந்தூர் தொழிலதிபர் கொலை வழக்குக்குப் பிந்தைய அதிர்ச்சியான வழக்காக சமூகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.