உலக புகழ் பெற்ற திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்வதற்கு நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். பல ஆயிரம் கோடி மதிப்புள்ள  திருப்பதியில் ஏழுமலையான் கோவிலை திருமலை தேவஸ்தானம் நிர்வாகம் செய்து வருகிறது. குறிப்பாக விடுமுறை நாட்கள் மற்றும் வார இறுதி நாட்களில் திருப்பதியில் கூட்டம் அலைமோதும். இதனால் இலவச தரிசனம் செய்யும் பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்யும் சூழல் ஏற்பட்டு வருகிறது. விஐபி தரிசனம் கட்டண தரிசனம் உட்பட பல்வேறு சிறப்பு தரிசனங்களுக்கும் அனுமதி அளித்து வருகிறது.

இந்த நிலையில் பிப்ரவரி மாத தரிசனத்துக்கான ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு குறித்த தகவலை திருப்பதி திருமலை தேவஸ்தான போர்டு அறிவித்துள்ளது. திருப்பதி கோயிலில் தரிசனம் செய்ய, அதற்கான முன்பதிவு டிக்கெட்டுகளை 3 மாதங்களுக்கு முன்பே தேவஸ்தான போர்டு வெளியிடுவது வழக்கம். அந்த வகையில், பிப்ரவரி மாத தரிசனத்துக்கான இணைய தள டிக்கெட்டுகள், வரும் 21ம் தேதி ஆன்லைனில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது