நாமக்கல் மாவட்டத்தில் உள்ள குளத்து பாளையம் பகுதியில் சாமியாத்தாள் என்ற 67 வயது மூதாட்டி வசித்து வந்துள்ளார். இவரது கணவர் ராசப்பன் கடந்த 30 வருடங்களுக்கு முன்பாக இறந்துவிட்ட நிலையில் கிருஷ்ணமூர்த்தி என்ற மகனும் கிருஷ்ணவேணி என்ற மகளும் இருக்கிறார்கள்.

இந்நிலையில் சாமியாத்தாள் விவசாயம் பார்த்துவிட்டு அந்த பகுதியில் உள்ள ஒரு தோட்டத்து வீட்டில் தனியாக வசித்து வந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு உறவினர் ஒருவரது திருமணத்திற்கு சென்று விட்டு வீட்டிற்கு திரும்பினார்.

இவர் வீட்டு வாசலில் கட்டில் போட்டு படுத்திருந்த நிலையில் மர்ம நபர்கள் சிலர் நள்ளிரவில் வீட்டிற்குள் நுழைந்து கத்தியை காட்டி அந்த பெண்ணை மிரட்டி வீட்டிற்குள் இருந்த நகை பணம் போன்றவற்றை எடுத்து தருமாறு கூறினர்.

இதனால் பயந்து போன மூதாட்டி கத்தி கூச்சலிட்ட நிலையில் அவர்கள் அந்த மூதாட்டியை கத்தியால் கொடூரமாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். அவரை மீட்டு ஒரு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்து நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் ஆனந்தன், அஜித்குமார் ஆகிய இரண்டு பேரை கைது செய்தனர். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஆனந்தன் வீட்டில் வேலை பார்த்து வந்துள்ளார். அடிக்கடி அவர் மூதாட்டியின் வீட்டிற்கு வந்து பணம் வாங்கி சென்றதாக தெரிகிறது. சம்பவம் நடந்த அன்றும் ஆனந்தன் மூதாட்டியிடம் பணம் கேட்டுள்ளார்.

அவர் பணம் கொடுக்க மறுப்பு தெரிவித்துள்ளார். பொதுவாக மூதாட்டி நகையை கழற்றி சமையலறையில் வைப்பார். அன்று நகையை தேடி பார்த்தும் கிடைக்காததால் கோபத்தில் ஆனந்தன் அஜித் குமாருடன் சேர்ந்து மூதாட்டியை கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார்.