
உத்தரப்பிரதேசத்தின் சம்பல் மாவட்டத்தில், கணவன்-மனைவி இடையிலான குடும்ப தகராறு கொடூர சம்பவமாக மாறியுள்ளது. அதாவது அஸ்மோலி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஒரு கிராமத்தில், மே 21-ம் தேதி இரவு இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதால், மனைவி கோபத்தில் கணவரின் அந்தரங்க உறுப்பை கூர்மையான ஆயுதத்தால் துண்டித்ததாக கூறப்படுகிறது. இதற்குப் பிறகு, அதே பெண் ஆசிட் குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்தார்.
இந்த சம்பவத்துக்கு பிறகு இருவரும் பலத்த காயங்களுடன் மொராதாபாத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆரம்பத்தில் இது குடும்ப தகராறால் ஏற்பட்ட சம்பவமாகக் கருதப்பட்டாலும், நாட்கள் கடந்தபின் வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டது. கடந்த திங்கட்கிழமை, பாதிக்கப்பட்ட கணவர் போலீசில் தன் மனைவி மீது கொடுத்ததோடு தன்னை கொலை செய்ய முயற்சி செய்தார் என்று கூறியுள்ளார்.
இதே நேரத்தில், மனைவியின் சகோதரரும் ஒரு புகார் அளித்துள்ளார். அதில், “வரதட்சணை கோரிக்கையை நிறைவேற்றாத காரணத்தால், என் சகோதரியை அடித்து ஆசிட் குடிக்கும்படி கட்டாயப்படுத்தினார்” என புகார் கொடுத்துள்ளார். இது தொடர்பாக கணவர் உட்பட 5 பேர்மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து அஸ்மோலி காவல் நிலைய அதிகாரி ராஜீவ் மாலிக் கூறியதாவது, “இருவரின் புகார்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன, மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது” என்றார்.
தற்போது கணவன்-மனைவி இருவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். உண்மை நிலை என்ன என்பதை கண்டறிய போலீசார் தொடர்ந்து வாக்குமூலங்களை சேகரித்து வருகின்றனர். இந்த சம்பவம் சம்பல் மாவட்டம் முழுவதும் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.