
அக்னி நட்சத்திரம் முடிவதற்குள் இந்தியாவில் உள்ள பல மாநிலங்களில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக கன மழை பெய்து வருகிறது. இதனால் வடகிழக்கு மாநிலங்களில் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளது.
அதிலும் குறிப்பாக அசாம், சிக்கிம் போன்ற மாநிலங்களில் கனமழையின் காரணமாக அதிக பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. நேற்று இரவு அருணாச்சல பிரதேசத்தில் உள்ள பனா – செப்பா என்ற சாலையில் ஏழு பேர் கொண்ட கார் ஒன்று சென்று கொண்டிருந்தது.
இந்த நிலையில் கார் சென்று கொண்டிருந்த சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டதால் காரில் உள்ள ஏழு பேரும் காருடன் சேர்ந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து உயிரிழந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசாரும் தீயணைப்பு துறையினரும் சம்பவ இடத்திற்கு சென்று பள்ளத்தாக்கில் கவிழ்ந்தவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
காரில் பயணம் செய்தவர்கள் இரண்டு குடும்பங்களை சேர்ந்த சஞ்சு(32), இவரது மனைவி தாஸ், குழந்தைகள் கச்சுங்(5) நிச்சா(2) மற்றும் ஒரு கர்ப்பிணி பெண் அவரது இரண்டு குழந்தைகள் என மொத்தம் ஏழு பேர் சேர்ந்து காரில் பயணம் செய்தனர்.
இதேபோன்று பல பயணிகளுடன் சென்ற ஒரு சுமோ வாகனமும் நிலச்சரிவில் சிக்கியது. அதிர்ஷ்டவசமாக சரிவு ஏற்பட்ட இடத்திற்கு சற்று தள்ளி இருந்ததால் அதிலிருந்தவர்கள் பத்திரமாக உயிர் தப்பினர்.