தென் ஆப்பிரிக்காவில் உள்ள  பள்ளி வளாகத்தில் நிறுவப்பட்டிருந்த காற்றழுத்தத்தில் செயல்படும் பவுன்ஸ் ஹவுஸ் (Inflatable Bounce House) திடீரென பலமான காற்றில் அப்படியே வானத்தில் பறந்தது.

இதில் உள்ளே விளையாடிக்கொண்டிருந்த இரண்டு சிறுவர்கள் சுமார் 25 அடி உயரத்தில் இருந்து தரையில் விழுந்தனர். இந்த பயங்கர சம்பவம் விழாவிற்கு வந்த பெற்றோர்கள் மற்றும் குழந்தைகள் கண்முன்னே நேர்ந்ததால் அனைவரும் அதிர்ச்சியில் உறைந்தனர்.

நிகழ்வின் போது பவுன்ஸ் ஹவுஸ் முறையாக நிலைக்கட்டப்படாமல் இருந்தது. அதே நேரத்தில் ஏற்பட்ட பலத்த காற்று அந்த கட்டமைப்பை பறக்க வைத்தது. பவுன்ஸ் ஹவுஸ் பறக்கும் காட்சியும், குழந்தைகள் அதிலிருந்து கீழே விழும் தருணமும், வீடியோவாக சமூக வலைதளங்களில் தற்போது தீவிரமாக பரவி வருகிறது.

சம்பவம் நடந்தவுடன் அங்கிருந்த ஊழியர்களும், மருத்துவ உதவியாளர்களும் உடனடியாக குழந்தைகளுக்கு முதலுதவி வழங்கினர். அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். சோதனைக்குப்பின் அவர்கள் நிலைமைகள் தற்போது சீராக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சம்பவம் பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகள் இல்லாமல் பள்ளி விழாக்கள் நடத்தப்படுவது தொடர்பாக பல கேள்விகளை எழுப்பியுள்ளது. “இது ஒரு தவிர்க்கக்கூடிய விபத்து,” என பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இனிமேல் இப்படியான நிகழ்ச்சிகளில் பாதுகாப்பு கட்டுப்பாடுகளை கடைபிடிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது.