ஹரியானாவின் ரோஹ்தக் மாவட்டம் மெஹாமில் உள்ள அஜைப் கிராமத்தில் நடைபெற்ற கொடூரமான சம்பவம் மாவட்டத்தையே கலங்கச் செய்துள்ளது. ஜார்க்கண்டை சேர்ந்த பிரியங்கா என்ற தாய், தனது 2 மாதக் குழந்தை ஜெய்விக்கையை தண்ணீர் டிரம்மில் மூழ்கடித்து கொன்றதுடன், தானும் தற்கொலை செய்ய முயற்சித்த சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் மே 27ஆம் தேதி நடந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். ஆரம்ப விசாரணையில், முகத்தை துணியால் மூடிய ஒரு பெண் வீட்டுக்குள் நுழைந்து, தன்னை  அடித்துவிட்டு குழந்தையை கொன்றதாக பிரியங்கா புகார் அளித்திருந்தார்.

ஆனால், மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட பின்னர், போலீசாரின் தீவிர விசாரணையில், உண்மை தகவல்கள் வெளிவந்தன.  குழந்தையை தானே கொன்றதாகவும், தற்கொலை செய்யும் நோக்கத்தில் ‘ஆல் அவுட்’ எனும் விஷத்தை குடித்ததாகவும் பிரியங்கா ஒப்புக்கொண்டார்.

ஜார்க்கண்டில் உள்ள தாய் வீட்டிற்கு திரும்ப விரும்பிய பிரியங்காவை அவரது கணவர் அமித் மற்றும் மாமியார் தடுத்ததால் இந்த முடிவு எடுத்ததாக கூறியுள்ளார். போலீசார் தற்போது பிரியங்காவை கைது செய்து வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இந்த சம்பவம் சமூகத்தில் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஒரு தாயின் கையாலேயே குழந்தையின் உயிர் பறிக்கப்பட்டிருப்பது பலரது உணர்வுகளை புண்படுத்தியுள்ளது. பிரியங்கா விரைவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாக மெஹாமின் காவல் நிலைய பொறுப்பாளர் சுபாஷ் சிங் தெரிவித்துள்ளார்.