திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள்  வந்து செல்கின்றனர். கடந்த 2 மாதங்களில் கோடை விடுமுறையை முன்னிட்டு 5 லட்சத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வந்து சென்றுள்ளனர்.

அதிலும் குணா குகையை பார்க்க ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். அவர்களின் பாதுகாப்புக்காக ஆழமான குகைப் பகுதிகளை எட்டிப் பார்க்க முடியாத அளவுக்கு இரும்பு கம்பிகள் வைக்கப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகளின் பாதுகாப்புக்காக வனத்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் ஆபத்தை உணராமல் ஒரு வாலிபர் எடுத்த வீடியோ சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது. அந்த வாலிபர் தடுப்பு கம்பிகளுக்கு இடையே உள்ள இடைவெளியை பயன்படுத்தி ஆபத்தான பகுதிக்கு சென்று வீடியோ எடுத்துள்ளார். ஒரு அடி தப்பினாலே பல நூறு அடி ஆழத்தில் விழுந்து உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுவிடும்.

அவரது செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர். இதுபற்றி அறிந்த வனத்துறையினர் அந்த வாலிபரின் இன்ஸ்டாகிராம் ஐடி மூலம் அவரது விபரங்களை சேகரித்து நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளனர். இது போன்ற ஆபத்தான செயல்களில் சுற்றுலா பயணிகள் ஈடுபடக்கூடாது என வனதுறையினர் எச்சரித்துள்ளனர்.