
தமிழகம் முழுவதும் கடந்த மாதம் 8-ம் தேதி 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் குறைந்த மதிப்பெண் மற்றும் தேர்ச்சி அடையாத மாணவர்கள் விடைத்தாள் நகல் வேண்டுமென்று கோரிக்கை விடுத்திருந்தனர். சமீபத்தில் அரசு தேர்வுகள் துறை விடைத்தாள் நகல்களை www.dge.tn.gov.in என்ற இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவித்தது. இந்த இணையதள முகவரியில் விடைத்தாள் நகல்களை பதிவிறக்கம் செய்த பிறகு மறு கூட்டல் மற்றும் மறு மதிப்பீடு செய்ய விரும்பும் மாணவர்கள் இதே இணையதள முகவரியில் பதிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும் மாணவர்கள் ஜூன் 5-ம் தேதி முதல் ஜூன் 7-ம் தேதி வரையில் மறு கூட்டல் அல்லது மறு மதிப்பீடுக்கு 12-ம் வகுப்பு மாணவர்கள் விண்ணப்பித்த நிலையில் தற்போது 11-ம் வகுப்பு மாணவர்கள் மறு கூட்டல் அல்லது மறு மதிப்பீடுக்கு விண்ணப்பிக்கலாம் என அரசு தேர்வு துறை அறிவித்துள்ளது.
அதன்படி இன்று பிற்பகல் முதல் www.dge.tn.gov.in என்ற இணையதள முகவரி மூலம் மறு கூட்டல் அல்லது மறு மதிப்பீடுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மாணவர்கள் application for retotaling/revaluation என்ற தலைப்பை கிளிக் செய்து பதிவிறக்கம் செய்து அந்த விண்ணப்பத்தை ஜூன் 13ஆம் தேதி மாலை 5 மணிக்கு முன்பாக மாவட்ட அரசு தேர்வுகள் உதவி இயக்குனர் அலுவலகத்தில் ஒப்படைக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.