
மத்தியப் பிரதேசத்தின் பெதுல் மாவட்டத்தில் மனதை உருக்கும் கொடூர சம்பவம் ஒன்று நடந்துள்ளது. கார்க் காலனி பகுதியில் ஹயாத் என்ற இளைஞர், தெரு நாய்கள் தனது கோழியை சாப்பிட்டுவிட்டதாகக் கூறி, கோபமடைந்து அந்த நாயை முதலில் கட்டையை கொண்டு பலமாக அடித்தார். அதன் பிறகு, அந்த நாயை ஒரு சாக்குபையில் அடைத்து, தீவைத்து எரித்துள்ளார். இந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 12.30 மணியளவில் நடைபெற்றது.
இந்தக் கொடூர சம்பவம் குறித்து வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றது. அந்த வீடியோவில், ஹயாத் நாயை அடிக்கும் காட்சியும், பின்னர் எரிக்கும் காட்சியும் தெளிவாக தெரிகிறது.

இந்த வீடியோவைக் கண்டு அதிர்ந்த விலங்கு உரிமை ஆர்வலர் வர்ஷா பவார், உடனடியாக பெதுல் கஞ்ச் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தியதில், மச்னா நதிக்கரையில் நாயின் எரிந்த உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டன.
விலங்கு வதைச் சட்டத்தின் கீழ் (BNS பிரிவு 325), ஹயாத் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தற்போது அவர் தலைமறைவாக உள்ளதாகவும், தேடப்படுவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
விலங்குகள் மீது மேற்கொள்ளப்படும் வன்முறைகளை தடுக்க கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்த கொடூர சம்பவம் மீதான கண்டனங்களும் சமூக வலைதளங்களில் அதிகரித்து வருகிறது.