நீலகிரி மாவட்டம் நிலக்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் முகமது(65). இவர் பாடந்துறை பகுதியில் இருக்கும் கல்லூரியில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி மைமூனா(60). நேற்று முன்தினம் முகமது வேலைக்கு சென்ற பிறகு மைமூனா மட்டும் வீட்டில் தனியாக இருந்தார்.

இந்த நிலையில் வேலை முடிந்து வீட்டிற்கு வந்த முகமது நீண்ட நேரமாக கதவை தட்டியுள்ளார். ஆனால் மைமூனா கதவை திறக்கவில்லை. அவரது செல்போனையும் தொடர்பு கொள்ள முடியவில்லை.

இதனால் முகமது அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது படுகாயங்களுடன் மைமூனா உயிரிழந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அவர் அணிந்திருந்த ஆறு பவுன் தங்க நகைகளும் திருடப்பட்டிருந்தது.

இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவம் இடத்திற்கு சென்று மூதாட்டியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் கொலை செய்து தங்க நகையை திருடி சென்றிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.