சென்னை கோட்டூர்புரத்தில், நள்ளிரவில் தனியாக வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணையும், அவரது 3 வயது குழந்தையையும் செல்போனில் படம் பிடித்த சொமேட்டோ நிறுவன உணவு டெலிவரி ஊழியர் கையும் களவுமாக பொதுமக்களால் பிடிபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவம் நடந்த வீட்டில் ஒரு தம்பதி வசித்து வந்த நிலையில், வெயில் காரணமாக கதவை பூட்டாமல் தூங்கியுள்ளனர். அதிகாலை 2.30 மணியளவில் பெண் எழுந்த போது, அவரது அறையில் சொமேட்டோ யூனிஃபாரத்தில் இருந்த நபர் செல்போனில் புகைப்படம் எடுப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து சத்தம் போட்டுள்ளார்.

பெண்ணின் சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் விரைந்து வந்து, அந்த நபரை துரத்தி ராஜீவ்காந்தி சாலையில் தரமணி நோக்கி ஓடிச் சென்ற போது மடக்கிப் பிடித்து தர்ம அடி கொடுத்தனர். பின்னர் அவர் கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார்.

இந்த சம்பவம் குறித்து அந்த பெண் காவல்துறையில் புகார் அளித்ததையடுத்து, போலீசார் நடவடிக்கையில் இறங்கினர். விசாரணையில், குற்றச்சாட்டுக்குள்ளானவர் தரமணி பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பதும், அவர் சொமேட்டோ நிறுவனத்தில் உணவு டெலிவரி பணியில் இருந்ததும் தெரியவந்தது.

கிருஷ்ணமூர்த்தி மீது, வீட்டிற்குள் சட்டவிரோதமாக நுழைந்தது, பெண்கள் மற்றும் குழந்தைகள் மீது தனிப்பட்ட புகைப்படங்கள் எடுப்பது, மற்றும் பாலியல் தொல்லை அளித்ததற்கான பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.