
சென்னை ஐஐடி வளாகத்தில் நடந்துள்ள பாலியல் சீண்டல் சம்பவம், மாணவர்களிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 20 வயதான மாணவி ஒருவர், நேற்று (ஜூன் 26) இரவு சுமார் 7.30 மணியளவில் தனியாக வளாகத்தில் நடந்து சென்று கொண்டிருந்த போது, இந்தக் கோர சம்பவம் நேர்ந்தது.
கையில் கட்டை வைத்திருந்த ஒரு இளைஞர், அந்த மாணவியின் தலைமுடியை இழுத்து, பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. மாணவி சத்தமிட்டதும், குற்றவாளி தப்பிச்சென்றுள்ளார். பயத்தில் உறைந்து போன அந்த மாணவி, உடனடியாக வளாகத்தில் பாதுகாப்புப் பணியில் இருந்த காவலாளிகளிடம் புகார் தெரிவித்தார்.
இது தொடர்பாக கோட்டூர்புரம் போலீசார் விசாரணை மேற்கொண்டதில், ஐஐடி வளாகத்திலுள்ள மும்பை சாட் என்ற ஃபுட் கோர்ட் கடையில் வேலை பார்த்த ரோஷன் குமார் (22) என்ற இளைஞர் தான் இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டதாக வெளிவந்தது.
பின்னர் ரோஷன் குமாரை கைது செய்த போலீசார், தற்போது அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மாணவி மன உளைச்சலில் உள்ள நிலையில், உளவியல் ஆலோசனை வழங்கும் நடவடிக்கையும் ஐஐடி நிர்வாகம் மேற்கொண்டுள்ளது.
இந்த சம்பவம், வளாகத்திற்குள் மாணவிகளின் பாதுகாப்பு குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பும் வகையில் உள்ளது. இது குறித்து குற்றவாளிக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று மாணவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.