கடந்த வருடம் டிசம்பர் மாதம் 18ஆம் தேதி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ரவிச்சந்திரன் அஸ்வின் ஓய்வு அறிவித்தார்.  பார்டர்-காவஸ்கர் தொடரில் பங்கேற்பதற்காக இந்திய அணியோடு சென்று அவர் மூன்றாவது போட்டி முடிவில் திடீரென்று ஓய்வை அறிவித்தார். 16 டெஸ்டில் 537 விக்கெட்டுகள் இதில் 37முறை 5 விக்கெட், எட்டு முறை 10 விக்கெட்டுகளை கைப்பற்றி சாதனை படைத்துள்ளார். இவர் தற்போது சென்னை அணிக்காக ஐபிஎல் விளையாட இருக்கிறார்.  கிரிக்கெட்டில் சிறந்த பங்களிப்பை கொடுத்த இவருக்கு கடந்த ஜனவரி மாதம் பத்மஸ்ரீ விருது வழங்குவதாக மத்திய அரசு அறிவித்திருந்தது.

இந்த நிலையில் சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள ராமகிருஷ்ணபுரம் முதல் தெருவில்  அஸ்வின் வசித்து வருகிறார். அவருக்கு மேலும் சிறப்பு சேர்க்கும் விதமாக இந்த தெருவுக்கு இவருடைய பெயரை சூட்ட சென்னை மாநகரப் பெருநகர மாநகராட்சி கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. அஸ்வினுக்கு சொந்தமான  கேரம் பால் ஈவென்ட் அண்ட் மார்கெட்டிங் நிறுவனம் பெயர் மாற்றும் திட்டத்தை குறித்து சென்னை மாநகராட்சியிடம் கோரிக்கை வைத்திருந்த நிலையில் தற்போது ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. விரைவில் அதிகாரப்பூர் பெயர் மாற்றம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.