திருவண்ணாமலை மாவட்டம் கழனிபாக்கம் கிராமத்தில் 100 நாள் வேலை திட்டத்தில் பெண்கள் உட்பட 49 பேர் வேலை பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது மதியம் 12 மணிக்கு வெயில் சுட்டெரித்ததால் அப்பகுதியில் உள்ள ஆலமரத்திற்கு கீழே ஒதுங்கி நின்றனர்.

அந்த சமயம் லேசான காற்று வீசியதால் ஆலமரத்தின் ஒரு பகுதி வேரோடு முறிந்து விழுந்ததால் வேண்டா(65), அன்னபூரணி(75) ஆகிய இரண்டு பெண்களும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும் தேவி(54), சம்பூரணம்(60), பச்சையம்மாள்(60), கனகா(58), முத்தம்மாள்(35), அனிதா(55), ரக்ஷிதா(7), ப்ரீத்திவின்(4), கிரஷாந்த்(5) உள்ளிட்ட  11  பேர் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து அறிந்த போலீசாரும், தீயணைப்பு வீரர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயமடைந்த 11 பேரையும் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி பச்சையம்மாள் உயிரிழந்தார். இறந்தவர்களது உடல் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.